Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

காரைக்காலில் மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள் திறப்பு :

காரைக்கால்: கரோனா பொது முடக்கத்தில் புதுச்சேரி அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்த நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் நேற்று அனைத்து வணிக நிறுவனங்களும், மதுக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஏப்.24-ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அத்தியாவசிய கடைகளைத் தவிர, வணிக நிறுவனங்கள், மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. கரோனா தொற்றுப் பரவல் ஓரளவு குறைந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டன. அதன்படி, காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்ல அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், காரைக்கால் கடற்கரையில் நேற்று பலரும் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டிருந்தன. இதனால், காரைக்கால் நகரப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிமாகக் காணப்பட்டது. அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டன.

மதுக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. ஏராளமான மதுப்பிரியர்கள் காலை முதலே மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x