Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

முழு ஊரடங்கை கண்காணிக்க தருமபுரியில் 86 சோதனைச் சாவடிகள் :

தருமபுரி

தமிழகத்தில் இன்று (10-ம் தேதி) முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் 86 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று 2-ம் அலை பரவலை கடுப்படுத்த தமிழகத்தில் இன்று (10-ம் தேதி) முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், காரிமங்கலம் வட்டங்களில் முழு ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல்துறை சார்பில் 11 பிரதான சோதனைச் சாவடிகளும், 75 சிறு சோதனைச் சாவடிகள் என மொத்தம் 86 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மகேந்திரமங்கலம், கும்பார அள்ளி, நரிப்பள்ளி, ஏரியூர், தொப்பூர், மஞ்சவாடி, ஒகேனக்கல் உள்ளிட்ட 11 இடங்களில் பிரதான சோதனைச் சாவடிகளும், ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் 3 சிறு சோதனைச் சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சோதனைச் சாவடிகள் அந்தந்த காவல் நிலைய எல்லையில் பிரதான சாலை சந்திப்புகள், முக்கிய சிறு நகரம் ஆகியவை அமைந்துள்ள இடங்களில் அமைக்கப்படவுள்ளன. இதுதவிர, 1,000 போலீஸார் இந்த சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் தொடர்ந்து பணிபுரிய உள்ளனர். இவர்கள் ஏ, பி, சி என 3 அணியாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் 8 மணி நேரத்துக்கு ஒரு அணி வீதம் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் பணியமர்த்தப்படுவர்.

பொதுமக்களின் அவசியமற்ற பயணங்களை கண்காணித்து தடுப்பது இவர்களின் பிரதான பணியாகும். அதேபோல, அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்பவர்களும் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்று கின்றனரா என்றும் போலீஸார் கண்காணிக்க உள்ளனர். கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களுடன் இவர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

இப்பணிகளை எஸ்பி பிரவேஷ்குமார் தலைமையில் 3 ஏடிஎஸ்பி-க்கள் மேற்பார்வை செய்யவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x