Published : 09 May 2021 03:16 AM
Last Updated : 09 May 2021 03:16 AM

தமிழ் பேராயம் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் : எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் அறிவிப்பு

சென்னை

2021-ம் ஆண்டுக்கான தமிழ்ப் பேராயம் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்ஆர்எம் தமிழ்ப் பேராயம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில் சிறந்த தமிழ் நூல்கள், சிறந்த தமிழ்ச் சங்கம், சிறந்த தமிழறிஞர்கள் ஆகிய பிரிவுகளின் 12 விதமான விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் கடந்த 2012-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. விருதுகள் விவரம் வருமாறு:

1. புதுமைபித்தன் படைப்பிலக்கிய விருது (சிறுகதை, புதினம், நாடகம்)

2. பாரதியார் கவிதை விருது (கவிதை)

3. அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது (கதை கவிதை, நாடகம்)

4. ஜி.யு.போப் மொழி பெயர்ப்பு விருது (மொழி பெயர்ப்பு நூல்)

5. ஆ.பெ.ஜே.அப்துல்கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு விருது (தமிழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நூல்)

6. முத்துதாண்டவர் தமிழிசை விருது (தமிழிசை சார்ந்த நூல்)

7. பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது (ஆய்வு நூல்)

8. முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூக நீதி விருது (தமிழ் சமுதாய மேம்பாடு/சமூக நீதி தொடர்பான நூல்)

9. சிறந்த தமிழ் இதழ் - சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது (தமிழ்க் கலை,இலக்கிய பண்பாட்டு இதழ்-ரூ.50 ஆயிரம் பரிசு),

10. சிறந்த தமிழ்ச் சங்கம் - தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது (ஓர் அமைப்புக்கு மட்டும்) ரூ.50 ஆயிரம் பரிசு,

11. சிறந்த கலைக் குழு - அருணாசல கவிராயர் விருது (தமிழிசைக் குழு/நாட்டுப்புற கலைக் குழு) ரூ.50 ஆயிரம் பரிசு,

12. சிறந்த தமிழறிஞர் பாரிவேந்தர் பைந்தமிழ் விருது (தமிழ் பேரறிஞர் - வாழ்நாள் சாதனையாளர்) ரூ.3 லட்சம் பரிசு.

படைப்புகள் 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் முதல் பதிப்பாக வெளிவந்திருக்க வேண்டும். 2021-ம் ஆண்டு வந்த நூல்கள் தகுதி பெறாது. பரிந்துரை கடிதம் எந்த விருதுக்கு என்று குறிப்பிட்டு 5 பிரதிகளுடன் அனுப்ப வேண்டும். பாரிவேந்தர் பைந்தமிழ் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் தமிழறிஞர்களின் தமிழ்ப் பணிகள், பட்டங்கள், நூல்கள் உள்ளிட்ட முழு தகவல்களுடன் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட வேண்டும். பிற நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர்களும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

படைப்புகள் தொடர்பான பரிந்துரைகளை, "செயலர், தமிழ்ப் பேராயம், அறை எண் 518, ஐந்தாவது தளம், பல்கலைக்கழக நிர்வாக கட்டிடம், எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் 603203" என்ற முகவரிக்கு மே மாதம் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை www.srmist.edu.in/tamilperayam/ என்ற இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x