Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

ஜேஇஇ 4-ம் கட்ட முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு : மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

கரோனா பரவலால் ஜேஇஇ 4-வது கட்ட முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு ஜேஇஇ தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் என்று என்டிஏ அறிவித்தது. அதன்படி கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 2 கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து கடந்த ஏப்ரலில் நடைபெறவிருந்த 3-ம் கட்ட தேர்வு கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 3, 4-ம் கட்ட தேர்வுகளை சேர்த்து மே மாத இறுதியில் நடத்த திட்டமிட்டு, அதற்கான பணிகளை என்டிஏ மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் கரோனா 2-வது அலை பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் டெல்லி உட்பட சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து சூழலின் தீவிரம் கருதி இந்த மாத இறுதியில் நடத்தப்படவிருந்த ஜேஇஇ 4-ம்கட்ட தேர்வுகளும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தற்போதைய கரோனா பரவல் சூழல் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மே 24 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. இதற்கான மாற்றுத் தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த காலக்கட்டத்தை தேர்வுக்கு நன்கு தயாராக மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in, jeemain.nta.nic.in இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759 000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x