Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

1,272 தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் : தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத 1,272 தற்காலிக ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட கருவூலக அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்அல்லாத 5,000 தற்காலிகபணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அதில் 778 துப்புரவாளர், 494 இரவுக் காவலர் என மொத்தம் 1,272 ஊழியர்கள் மட்டுமே தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு தொடர் பணிநீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு, தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை ஏற்று, 1,272 பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது.

எனவே, அலுவலர்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும்போது, அதை ஏற்று ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x