Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM
கரோனா தொற்று பாதித்த 20 வார்டுகளில் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் ச.விசாகன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விசாகன் பேசி யதாவது: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா பாதிப்பு இருக்கும் பகுதிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே கடந்த ஓராண்டாக தொடர்ந்து கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இன்று முதல் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட 20 வார்டுகளை தேர்ந்தெடுத்து பரிசோதனை முகாம்களை அதிகரிக்க வேண்டும். கரோனா தொற்று பாதிக்கப்பட்ட தெருக்களை ஏற்கெனவே பின்பற்றப்படும் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அடைத்து, அப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அவசியம் அணிய வேண்டும். மாநகராட்சியின் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் தொடர்பான சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மாநகராட்சி அழைப்பு மையம் எண் 842 842 5000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் சங்கீதா, நகர் பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு. குமரகுருபரன், உதவி நகர்நல அலுவலர் தினேஷ்குமார், செயற்பொறியாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT