Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

தாம்பரம், பல்லாவரத்தில் பிரச்சாரம் நிறைவு : குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பு

சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் மநீம, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டாலும், திமுக-அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்போர் நலச் சங்கங்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. இதனால், கடைசி நாளான நேற்று அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் போட்டிபோட்டு குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவு கோரினர்.

திமுக, அதிமுகவினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சென்று, குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளையும், குடியிருப்புவாசிகளையும் சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர்.

மேலும், பொதுநல அமைப்புகள், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் பாதுகாப்புக் குழு நிர்வாகிகளையும் சந்தித்து, தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதற்கிடையில், வேட்பாளர்கள் தொகுதி தலைமையிடப் பகுதிகளில் நேற்று மும்முரமாக வாக்கு சேகரித்தனர்.

தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா, கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா, அமமுக வேட்பாளர் கரிகாலன் ஆகியோர், தாம்பரம் நகரப் பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர். திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் மூவரும் தாம்பரம் மார்க்கெட் பகுதி சண்முகம் சாலையில் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x