Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள முதியோர், இணை நோய் உள்ளோர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பயப்பட தேவையில்லை என மாவட்ட நலவழித் துறை துணை இயக்குநர் கே.மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நேற்று அவர் கூறியது:
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஜன.16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், தற்போது 60 வயதுக்கு மேலான முதியவர்கள், 45 வயதுக்கு மேலான இணை நோய் உள்ளோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
காரைக்கால் மாவட்டத்துக்கு தேவையான தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எந்தவித உபாதைகளும் ஏற்படவில்லை. எனவே, யாரும் அச்சப்படத் தேவையில்லை. காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை மற்றும் திருநள்ளாறு, திருப்பட்டினம், கோட்டுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. ஆரோக்கிய செயலி மூலம் பதிவு செய்தும், பதிவு செய்ய இயலாதவர்கள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்தும், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT