Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM
தாராபுரம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தாராபுரம் பகுதியில் சின்னப் புத்தூர், பொட்டிக்காம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில்மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயார்நிலையில் இருந்தபோது, தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, ‘‘ஏக்கருக்கு ரூ.25,000 வரை செலவு செய்துள்ளோம். 90 நாட்களில் நன்கு விளைந்த மக்காச்சோளப் பயிர்கள் கதிர்விட்டு காய்ந்ததும், கதிர் அடிப்பதற்காக பாதுகாப்பாக வைத்திருந்தோம். கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச் சோளப் பயிர்களும், கதிர் அடிப்பதற்காக குவிக்கப்பட்டிருந்த கதிர்களும் நாசமாகின.
தற்போது 100 கிலோ எடை கொண்ட ஒரு குவிண்டால் மூட்டை மக்காச்சோளம் ரூ.1,400 முதல் ரூ.1,500 வரை விற்பனையாகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 600 டன் மக்காச்சோளம் நீரில் மூழ்கி வீணாகின. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறையினர் கூறும்போது, ‘‘பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீடு செய்திருந்தால் உரிய இழப்பீடு உறுதியாக கிடைக்கும். காப்பீடு செய்யாமல் இருந்தால், அரசின் வழிகாட்டுதல்படி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் முறையாக துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT