Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

காரைக்காலில் மின் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு

காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும், புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்தும், மின் துறை ஊழியர்கள் கடந்த 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் முதல்வர் வி.நாராயணசாமியுடன் போராட்டக் குழு பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து, காரைக்கால் போராட்டக் குழு பொதுச் செயலாளர் பழனிவேல் கூறியது:

முதல்வருடன் சங்கப் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், பண்டிகைக் காலமாக இருப்பதாலும், மழை பெய்து வருவதாலும் போராட்டத்தை கைவிட முதல்வர் கேட்டுக்கொண்டார். மத்திய மின்துறை அமைச்சருடன், முதல்வர், தலைமைச் செயலர், மின்துறை உயரதிகாரிகள் பங்கேற்கும் காணொலி வாயிலான கூட்டம் ஜன.20-ம் தேதி நடைபெற உள்ளதாகவும், அதில் தனியார் மயத்தை புதுச்சேரி அரசு எதிர்ப்பது உறுதி செய்யப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும், டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேச தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துச் செல்வதாகவும் கூறினார். எனவே, பொதுமக்களின் நலன் கருதி போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எவ்வித பலனும் கிடைக்கவில்லையெனில், பிப்.1-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x