Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
கோவை: கோவையில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) தீர்ப்பு வழங்கியது.
கோவையை அடுத்த கோவைப்புதூரில் 2011-ல் ‘ஏசியன் ஈமு ஃபார்ம்ஸ்' என்ற பெயரில் ஈமு கோழி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் இயக்குநர்களாக கோவை சுக்கிரவார்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன், ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த சிவக்குமார், பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்த சுதீஷ், ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்த மற்றொரு சிவக்குமார், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பிரான்சிஸ், பாலக்காட்டைச் சேர்ந்த சிவன் ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.
தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஊக்கத்தொகை, போனஸ் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பி கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 35 பேர் மொத்தம் ரூ.68.46 லட்சம் முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தபடி அவர்களுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக குனியமுத்தூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த செங்காளியப்பன் உள்ளிட்டோர் 2014-ல் கோவை மாநகர பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், சுப்பிரமணியன், சிவக்குமார், சுதீஷ், மற்றொரு சிவக்குமார், பிரான்சிஸ், சிவன் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி, குற்றம் சுமத்தப்பட்ட 6 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.18.90 லட்சம் அபராதம் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். மேலும், அபராதத்தில் ரூ.18 லட்சத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT