Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

விவசாய மின்இணைப்பு வழங்குவதன் மூலம் ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் மின்வாரிய அதிகாரிகள் தகவல்

விவசாய மின்இணைப்பு வழங்குவதன் மூலம், நடப்பாண்டில் ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயத்துக்கு சாதாரணம் மற்றும் சுயநிதி பிரிவில் மின்இணைப்புகளை தமிழக மின்வாரியம் வழங்குகிறது. சாதாரண பிரிவில் விவசாயிகளுக்கு மின்சாரம், மின்வழித் தட செலவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசமாக வழங்கப்படும். மின்வழித் தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். சாதாரண பிரிவில் மின்இணைப்புக் கேட்டு 4 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

சுயநிதி பிரிவில் தத்கால் எனப்படும் விரைவு மின்திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தில், 5 குதிரை திறன் மோட்டார் இணைப்புக்கு ரூ.2.50 லட்சமும், 7.50 குதிரைத் திறனுக்கு ரூ.2.75 லட்சமும், 10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சமும், 15 குதிரை திறனுக்கு ரூ.4 லட்சமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நடப்பாண்டில், சாதாரண பிரிவில் 25 ஆயிரம், விரைவு திட்டத்தில் 25 ஆயிரம் என மொத்தம்50 ஆயிரம் விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, ஏற்கெனவே விண்ணப்பித் துள்ள விவசாயிகளிடம் இருந்து சாதாரண பிரிவுக்கு பதிவு மூப்பு அடிப்படையிலும், விரைவு திட்டத்துக்கு முன்னுரிமை அடிப்படையிலும் விண்ணப்பங்களை பெற்று கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இணைப்பு வழங்க மின்வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக அந்தப் பணி தடைபட்டது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள தால், மின்இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதன்மூலம், ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x