Published : 10 Dec 2020 03:17 AM
Last Updated : 10 Dec 2020 03:17 AM

பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க ஊராட்சிகள்தோறும் பல்நோக்கு மண்டபம் முதல்வரிடம் நாகை எம்.பி கோரிக்கை மனு

நாகப்பட்டினம்

பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாக்க ஊராட்சிகள்தோறும் பல்நோக்கு மண்டபம் கட்டித்தர வேண்டும் என முதல்வரிடம் நாகை எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று வந்த முதல்வர் பழனிசாமியிடம், நாகை எம்.பி எம்.செல்வராஜ் அளித்த கோரிக்கை மனு:

நாகை மாவட்டத்தில், கதிர் வரும் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளதால், கதிர்கள் அனைத்தும் பதராக மாறிவிடும்.

எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். கரோனா தொற்று, நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக வேலையிழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரமும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

கனமழையால் முழுமையாக இடிந்துவிழுந்த குடிசை, தொகுப்பு வீடுகளுக்கு ரூ.25 ஆயிரமும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும்.

ஆண்டுதோறும் பேரிடரால் பாதிக்கப்படும் நாகை மாவட்டத்தில் ஊராட்சிகள்தோறும் மக்களைப் பாதுகாக்க பல்நோக்கு மண்டபம் கட்டித்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல, நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி அளித்துள்ள கோரிக்கை மனுவில், “மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மழையால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x