Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM
கோவை சரவணம்பட்டி அருகே கீரணத்தம் தொழில்நுட்பப் பூங்கா அருகில் மழைநீர் ஓடை உள்ளது. இதில் கொட்டப்படும் குப்பையாலும், புதர்கள் மற்றும் களைச்செடிகள் மண்டி கிடந்ததாலும் நீரோட்டம் தடைபட்டது.
இந்நிலையில், கீரணத்தம் நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்பினர், தனியார் சமூகப் பங்களிப்பு திட்டத்தின் கீழ், இரு நிறுவனங்களுடன் இணைந்து, இந்த ஓடையை தூர்வாரி சீரமைத்துவருகின்றனர்.
இது குறித்து கீரணத்தம் நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த எஸ்.சிவராஜா கூறியதாவது:
இப்பகுதியில் உள்ள சாம்பிராணி குட்டையில் இருந்து வழிந்தோடி வரும் மழை நீரானது, தொழில்நுட்பப் பூங்காவின் கீழ்ப்பகுதியில் குறுக்கே கடந்து,நல்லுசாமி தடுப்பணை, கீரணத்தம்,கௌசிகா நதியை நோக்கிச் செல்கிறது. இந்த மழை நீர் ஓடையைதூர்வாரி சுமார் 5 ஆண்டுகள் இருக்கும். இதுபற்றி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய அனுமதி பெற்று, இரு அமைப்புகளுடன் இணைந்து இந்த ஓடையைத் தூர்வாரி வருகிறோம். குப்பை கொட்டுவதைத் தடுக்கும் வகையில், ஓடையைச் சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட உள்ளன.
கோவை வடக்குப் பகுதி ஏற்கெனவே வறட்சி மிக்க பகுதியாகும். எனவே, நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த ஓடையைச் சீரமைப்பதன் மூலம், மழை நீர் தடையின்றி செல்வதால், நிலத்தடி நீர் பெருகும். சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும். அத்துடன் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT