Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM
கோ-ஆப்டெக்ஸ் சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியில் ரூ.10 லட்சத்துக்கு பொருட்கள் விற்பனையாகின.
கோ-ஆப்டெக்ஸ் சார்பில் இந்த ஆண்டு சிறப்பு விற்பனை கண்காட்சி சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள சிபிஆர் ஆர்ட் சென்டரில் கடந்த அக். 23-ம் தேதி தொடங்கியது.
அந்த கண்காட்சியில் ஆர்கானிக் பருத்தி சேலைகள், காரைக்குடி செட்டிநாடு பருத்தி சேலைகள், புதிய நேர்த்தியான வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் பருத்தி சேலைகள், பாரம்பரியம் மிக்க அருப்புக்கோட்டை, திண்டுக்கல், மதுரைமற்றும் திருச்சி சேலைகள் ஆகியன விற்பனை செய்யப்பட்டன. மேலும் ஆடம்பரமான வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், ஆரணி பட்டு சேலைகள் மற்றும்பலவிதமான கைத்தறி ஆடைகள், குர்த்தீஸ், ஆயத்த ஆடைகள், திரைச் சீலைகள், படுக்கை விரிப்புகள், யோகாசன விரிப்புகள் ஆகியனவும் விற்பனை செய்யப்பட்டன. இந்தக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்ட கைத்தறி பட்டு மற்றும் பருத்தி துணி ரகங்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. நவ.2-ம் தேதியுடன் நிறைவடைந்த 11 நாள் கண்காட்சியில் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பாக கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் கூறும்போது, “ஊரடங்கு காலத்தில் விற்பனை குறைவாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் கோ-ஆப்டெக்ஸ் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை காரணமாக ரூ.10 லட்சத்துக்கு விற்பனைநடைபெற்றுள்ளது. தற்போது எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை விற்பனை மையத்தில் இம்மாதம் முழுவதும் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. அங்கு துணி ரகங்களை வாங்கினாலும் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT