Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

தமிழக முதல்வர் 10-ம் தேதி குமரி வருகை கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு

நாகர்கோவில்

தமிழக முதல்வர் கே.பழனிசாமி வரும் 10-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். நாகர்கோவிலில் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது.

மாவட்டந்தோறும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த செப்டம்பர் 22-ம் தேதி வருவதாக இருந்தது. பிரதமருடன் கரோனா கட்டுப்பாடு குறித்து காணொலி கூட்டம் இருந்ததால் அத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அக்டோபர் 13-ம் தேதி அவர் குமரி வருவதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் முதல்வரின் தாயார் இறந்ததால் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டன.

தற்போது, வரும் 10-ம் தேதி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார். இதுகுறித்து தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் கே.பழனிசாமி வரும் 10-ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் வரும் அவர், அன்று மதியம் 3 மணிக்கு நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில், முடிவுற்றதிட்டப் பணிகளை பொதுமக்கள்பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து, பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள், கரோனா தொற்றுநோய் தடுப்புப் பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வு செய்கிறார். அன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், மறுநாள் (11-ம் தேதி) காலை தூத்துக்குடி புறப்பட்டுச் செல்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x