Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

மண்டைக்காடு கோயிலில் ஆகமமுறைப்படி - திருப்பணி நடத்தக்கோரி இந்து அமைப்பினர் போராட்டம் :

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஆகம முறைப்படிதிருப்பணிகளை தொடங்கவேண்டும் என வலியுறுத்தி, இந்து அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

இக்கோயிலின் மூலஸ்தான கூரையில் கடந்த ஜூன் 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்காலிகமாக இரும்பு மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1.80 கோடிஒதுக்கியது. திருப்பணிகளை இந்துஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

இதற்கிடையே, கோயிலில் நடந்த தேவபிரசன்னத்தின் அடிப்படையில், ஆகம முறைப்படி திருப்பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, மண்டைக்காடு கோயில் முன்பு நேற்று போராட்டம் நடத்த போவதாக இந்து அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதனால், மண்டைக்காடு கோயில், கூட்டுமங்கலம், படர்நிலம், வெட்டுமடை, பிள்ளையார்கோயில் சந்திப்பு, லட்சுமிபுரம் பகுதிகளில் நேற்று காலையில் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபிநவ் தலைமையில், எஸ்.பி. பத்ரிநாராயணன் மேற்பார்வையில், குளச்சல் டிஎஸ்பி தங்கராமன் மற்றும் 600-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். மண்டைக்காடு சுற்றுப்புற பகுதிகளில் வாகனங்கள், மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகள், பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமம் அடைந்தனர்.

கோயில் பகுதியில் செல்ல முடியாததால், இந்து அமைப்பினர் பருத்திவிளை சந்திப்பில் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்து முன்னணி கோட்ட செயலாளர் சோமன், மாவட்ட இந்து கோயில்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் பதி, ஹைந்தவ சேவா சங்க பொதுசெயலாளர் ரத்தினபாண்டியன், பெரிய சக்கர தீவெட்டி குழு தலைவர் முருகன், ஐயப்ப சேவா சமாஜ மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா மற்றும் இந்து அமைப்பினர் திரண்டனர். இவர்கள் கோயில் நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது போலீஸார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற இந்து அமைப்பினர் 150-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x