Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM
ஐந்துகாணி பகுதியில் வசிக்கும் இருளர் மக்களின் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அணுசக்தி மருத்துவமனை, இந்திய பெண் விஞ்ஞானிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சி ஐந்துகாணி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பாலாற்றங்கரையில் இப்பகுதி அமைந்துள்ளதால் வெள்ளப்பெருக்கால் இருளர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம், தன்னார்வலர்கள் உணவு மற்றும் ஆடைகளை வழங்கி உதவி செய்துள்ளனர்.
இந்நிலையில், கல்பாக்கம் அணுசக்தி மருத்துவமனை மற்றும் இந்திய பெண் விஞ்ஞானிகள் கூட்டமைப்பு சார்பில், இருளர் மக்களின் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில்சிறுவர்கள், குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், சுகாதாரம் குறித்து இருளர் மக்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், அணுசக்தி மருத்துவமனை மருத்துவர் வினிதா, தன்னார்வலர்கள் செரினா, ஹரிஸ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கிங் உசேன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT