Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM
வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பொதுமக்கள் குறைந்த அளவில் பங்கேற்று மனுக்களை அளித்தனர். இதற்கிடையில், கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நெட்டேரி கிராமத்தைச் சேர்ந்த தனியார் செவிலியர் கல்லூரி மாணவி கோகிலா என்பவர் வங்கியில் கல்விக்கடன் வழங்க மறுப்பது தொடர்பாக கண்ணீர்மல்க புகார் மனு அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், கீழ் ஆலத்தூரில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை சார்பில் மாணவிக்கு 2 நாளில் கல்விக்கடன் வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் பெயரை கடன் உத்தரவாதத்துக்கான உறுதிமொழி அளிப்பவராக பெயரை சேர்த்து கொடுக்க வேண்டும் என முன்னோடி வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், செவிலியர் கல்லூரி மாணவிக்கு ரூ.1.97 லட்சம் கல்விக் கடனுக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று வழங்கினார். இந்த ஆணையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளையில் கொடுத்த கடன் தொகை பெற்றுக்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT