Published : 22 Nov 2021 03:09 AM
Last Updated : 22 Nov 2021 03:09 AM
கே.வி.குப்பம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ உட்பட 66 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். அரசு சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், மழைநீரை வெளியேற்ற தவறிய வருவாய்த் துறையினர் மற்றும் தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகே குடியாத்தம்- காட்பாடி பிரதான சாலையில் நேற்று மறியலில்ஈடுபட்டனர். கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் பூவை.ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு அரசுக்கு எதிராகவும், மழைநீரை வெளியேற்ற தவறிய அரசு அதிகாரிகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினார். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த தகவலறிந்த கே.வி.குப்பம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலை கைவிடக்கோரி பேச்சு வார்த்தை நடத்தினர். இறுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட வர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி எம்எல்ஏ பூவை.ஜெகன்மூர்த்தி உட்பட 66 பேரை கைது செய்தனர். பின்னர், தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு சிறிது நேரம் கழித்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT