Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM
சிவகங்கை மாவட்டம், இளை யான்குடி அருகே வாகனத்தை மறித்த எஸ்ஐ மீது மோத முயன்ற ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
இளையான்குடி வட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இவ்வட்டத்துக்கு உட்பட்ட குமாரக்குறிச்சி முனியாண்டி கோயில் அருகே போக்குவரத்து எஸ்ஐ பார்த்திபன் தலைமையில் காவலர்கள் கோட்டைச்சாமி, முனிக்கண்ணன் ஆகியோர் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பரமக்குடியில் இருந்து இளையான்குடி நோக்கி சரக்கு வாகனம் வந்தது. அதை எஸ்ஐ பார்த்திபன் மறித்தார். அப்போது, அவர் மீது மோதுவதுபோல் வாகனம் வந்தது. இதைப் பார்த்த எஸ்ஐ சாலையை விட்டு கீழே இறங்கி தப்பினார்.
இதையடுத்து வாகனம் நிற்காமல் வேகமாகச் சென்றது. அந்த வாகனத்தோடு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும் வேகமாகச் சென்றார். இதையடுத்து அந்த இரு வாகனங்களையும் எஸ்ஐ பார்த்திபன் மற்றும் போலீஸார் மோட்டார் சைக்கிளில் 2 கி.மீ. வரை விரட்டிச் சென்றனர். இதையடுத்து இரு வாகனங்களையும் நிறுத்திவிட்டு அதில் வந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.
சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது 25 கிலோ எடையுள்ள 40 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT