Published : 21 Nov 2021 03:09 AM
Last Updated : 21 Nov 2021 03:09 AM

சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா :

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர், 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கும்ப கலச பூஜை, சண்முகர் ஜெபம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் கதிர்வேல் முருகனுக்கும், வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேய சுப்பிரமணியருக்கும் 21 வகையான மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேய சுப்பிரமணிய சுவாமிக்கு 23 கிலோ எடை கொண்ட வெண்கலச் சட்டியில் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. பூஜைகளை ஹரி பட்டர், சுப்பிரமணிய பட்டர், அரவிந்த் பட்டர் செய்திருந்தனர். கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ , மண்டகப்படிதாரர்களான நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிசெல்வம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x