Published : 07 Nov 2021 03:08 AM
Last Updated : 07 Nov 2021 03:08 AM

கல்லூரி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை வடியச் செய்ய கோரிக்கை :

காரைக்கால்: காரைக்காலில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை வடியச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் பாரதியார் சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால், கல்லுாரியைச் சுற்றி குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது. கல்லுாரி முகப்பு பகுதியில் அதிக அளவில் மழைநீர் தேங்கியிருப்பதால் ஆசிரியர்கள், மாணவர்கள் கல்லூரிக்குள் சென்று வருவதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.

தொடர் விடுமுறைக்குப் பிறகு நாளை (நவ.8) கல்லூரி திறக்கப்பட உள்ள நிலையில், இதுவரை கல்லூரி வளாகத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறியது: கனமழை காரணமாக கல்லுாரி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, உடனடியாக மழைநீரை வடியச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள மழைநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x