Published : 07 Nov 2021 03:08 AM
Last Updated : 07 Nov 2021 03:08 AM

மின் விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலையில் - மின்வாரியம் விழிப்புடன் செயல்படுவது எப்போது? : மக்களை அச்சுறுத்தும் அபாயகர மின்கம்பங்கள்

மின் விபத்துகளை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். ஆனால், அபாயகரமாக நிற்கும் மின் கம்பங்களை மாற்ற அதிகாரிகள் எப்போது நடவடிக்கை எடுப்பார்கள்? என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் கிராமத்துக்கு கோவில்பட்டி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பசுவந்தனை மின்வாரிய அலுவலகம் மூலம் மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. கீழமுடிமண் கிராமம் வடக்கு தெருவில் உள்ள மின்மாற்றி மூலம் மின்சாரம் பெறும் 2 மின் கம்பங்களும் சிமென்ட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் அபாயகரமாக உள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதேபோல, பொது இ-சேவை மையகட்டிடத்துக்கு மின்சாரம் வழங்கும்மின்கம்பம் உள்ளிட்ட மேலும் 2 மின்கம்பங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இதுதொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறும்போது, “ பசுவந்தனை, கோவிந்தன்பட்டி, நாகம்பட்டி, குதிரைகுளம், கைலாசபுரம், கீழமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்த நிலையில் நிற்கின்றன.

தற்போது பருவமழைக் காலம் என்பதால் மின் விபத்துகளை தடுப்பது குறித்துமின்வாரிய அதிகாரிகள் விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பசுவந்தனை சுற்றுவட்டார பகுதி மக்களின் நலன் கருதி சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x