Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் :

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி முன்கூட்டியே ஊதியம் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தினக்கூலி ஊழியர்களுக்கு மட்டும் மாத கடைசி நாள் வரை ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, நிலைய அலுவலக வாயிலில் நேற்று தினக்கூலி ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு, தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் ஸ்டீபன் தலைமை வகித்தார்.

மேலும், வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலிகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன. இதையடுத்து, அக்டோபர் மாத ஊதியத்தை உடனடியாக வங்கி மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இனிவரும் காலங்களில் மாத ஊதியத்தை மற்ற ஊழியர்களுக்கு வழங்குவதுபோல, உரிய நாளில் வழங்குவதாகவும் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் உறுதியளித்ததன் அடிப்படையில், ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x