Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(45). பாமக பிரமுகரான இவர், திருபுவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடந்த மதமாற்ற நிகழ்வுகளை தட்டிக்கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில் திருவிடைமருதூர், கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்த 18 பேர் சதி திட்டம் தீட்டி, ராமலிங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது. ராமலிங்கம் கொலைக்கு பின்னணியில் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராமலிங்கம் கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில் 12 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ரகுமான் சாதிக், முகமது அலி ஜின்னா, அப்துல் மஜீத், புர்ஹானுதீன், சாகுல் அமீது, நபீல் ஹாசன் ஆகிய 6 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு விசாரணை சென்னை அருகே பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள 6 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக பூந்தமல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் நேற்று பூந்தமல்லி காவல் நிலையத்தில் 6 பேரையும் கண்டுபிடித்து தரக் கோரி ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். புகாரின்பேரில், பூந்தமல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT