Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM
மேகவெடிப்பு மழை காரணமாக ஒகேனக்கல் காவிரியாற்றில் திடீரென அதிகரித்த நீர்வரத்து ஒரே நாளில் சரிந்தது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 21-ம் தேதி காலை விநாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அன்று இரவு ஒகேனக்கல்லுக்கும், கர்நாடக மாநிலம் கொள்ளேகாலுக்கும் இடைப்பட்ட பகுதியில் காவிரியாறு வரும் வழியில் வனப்பகுதியில் திடீரென கனமழை பெய்துள்ளது. இதனால், 22-ம் தேதி அதிகாலை ஒகேனக்கல் காவிரியாற்றில் திடீரென நீர்வரத்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
மேகவெடிப்பு போன்ற காரணங்களால் வனப்பகுதியில் குறைந்த நேரத்தில் மிக அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதனால் சிற்றோடைகளில் இருந்து காவிரியாற்றில் சேர்ந்த தண்ணீரால் ஒகேனக்கல் காவிரியில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். மேலும், இவ்வாறு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அதிகபட்சமாக ஒரு நாளுக்குள் சரியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று முன் தினம் மாலை 6 மணி வரை விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாகவே நீடித்த நீர்வரத்து நேற்று காலை அளவீட்டின் போது விநாடிக்கு 26 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. மாலையில் இந்த அளவில் மேலும் 8,000 கன அடி அளவுக்கு சரிவு ஏற்பட்டு விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக காவிரியாற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT