Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM
மாமல்லபுரம் படூர் ஊராட்சியில் மிக மோசமாக உள்ள சாலையால் அந்தப் பகுதியில் வசிக்கும் 850 குடும்பங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளன.
கேளம்பாக்கம் அருகே உள்ள படூர் ஊராட்சியில் அமைந்துள்ளது எக்ஸ்.எஸ். ரியல் ஹீலியோ சிட்டி. படூர் ஊராட்சியில் பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்து சுமார் ஒரு கிமீ தூரத்தில் உள்ளது. இந்த குடியிருப்பில் 850 குடும்பங்களைச் சேர்ந்த 2,500 பேர் வசிக்கின்றனர்.
பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்து இந்த நகருக்குச் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக பணிக்குச் செல்லும் பெண்கள், குழந்தைகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மழைக் காலங்கலில் மழைநீர் தேங்கி சேரும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் மின்விளக்கு வசதியும் இல்லாததால் இந்த குண்டும் குழியுமான சாலையில் செல்வது என்பதே சவாலான காரியமாக மாறிவிடுவதாக இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் இந்தச் சாலையில் செல்வதற்கு கடும் சிரமம் அடைவதாகவும் இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு இடங்களில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து அதற்கான பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்தச் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் உரிய நிதியை ஒதுக்கி இந்தச் சாலையை சீரமைத்துத் தர, உரிய அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT