Published : 24 Oct 2021 03:08 AM
Last Updated : 24 Oct 2021 03:08 AM
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. தென்பெண்ணைஅணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. தற்போது அணையில் 41.33 அடி தண்ணீர் தேங்கி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 908 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அதே அளவாக 2-வது நாளாக விநாடிக்கு 908 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக தண்டோரா போடப்பட்டு, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமமக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும், ஆற்றைக் கடந்து செல்லவும் முயற்சி செய்யக்கூடாது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கிராமமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT