Published : 24 Oct 2021 03:08 AM
Last Updated : 24 Oct 2021 03:08 AM

தேவர் ஜெயந்தி விழா ஆலோசனைக் கூட்டம் :

கோவில்பட்டி: அக்.27-ம் தேதி மருது சகோதரர்களின் 220-வது நினைவு நாள் மற்றும் 30-ம் தேதி முத்துராமலிங்கத்தேவரின் 114-வது குருபூஜை நடைபெறுவதை முன்னிட்டு, கோவில்பட்டியில் காவல் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

டிஎஸ்பி உதயசூரியன் பேசியதாவது: அக்.28-ம் தேதி முதல் 30-ம்தேதி வரை கமுதி, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மரியாதை செலுத்த வருவதற்கு அனுமதி இல்லை. பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் (5 பேருக்கு மிகாமல் மற்றும் 3 வாகனங்களுக்கு மிகாமல்) மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி மற்றும் வாகன முன் அனுமதி பெற்று அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி மரியாதை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அனுமதி பெற விரும்பும் அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெற இன்று (24ம் தேதி) வரை ramanathapuram.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுமதி பெற்றவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது. வழித்தடங்களில் பட்டாசு வெடிப்படை தவிர்ப்பதுடன், ஒலி பெருக்கி ஏதும் பொருத்தி செல்லவோ, சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை வாகனங்களை கட்டியபடியோ, கோஷங்களை எழுப்பியவாறோ செல்லக் கூடாது.

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே நினைவிடத்துக்கு வந்து செல்ல வேண்டும். சொந்த கிராமங்களில் மரியாதை செலுத்தும் விழாவிற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என்றார். இதே போல், கயத்தாறு காவல்நிலையத்திலும் டிஎஸ்பி உதயசூரியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x