Published : 18 Oct 2021 03:10 AM
Last Updated : 18 Oct 2021 03:10 AM

உடுமலையில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு :

உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. திருமூர்த்தி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், பாலாறு மூலம் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அதேபோல பரம்பிக்குளத்தில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாகவும் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 33 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 953 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 1044 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 900 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடுமலை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது ‘‘தொடர் மழையால் நெல் மற்றும் தக்காளி அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தொடர் மழை நல்ல பலனை தந்துள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x