Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM

புதுவை மாநில தேர்தல் ஆணையர், பேரவைத் தலைவரை தகுதி நீக்கம் செய்க : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைசெயலாளர் தேவ பொழிலன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸின் இடஒதுக்கீட்டு அறிவிப்பு புதுச்சேரியில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படவில்லை என்பது நன்கு தெரிந்திருந்தும் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 2438 d(6)8 மற்றும் 243 t(6)8 ஆகியவற்றை சுட்டிக்காட்டி இடஒதுக்கீட்டை அறிவிப்பு செய்தது சட்ட விரோத செயலாகும். இதன் காரணமாகத்தான் சென்னை உயர்நீதிமன்றத்தால் அது ரத்து செய்யப்பட்டது. எனவே புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தவதற்கும், அரசியல் கட்சிகளின் பந்த் போராட்டம் நடைபெறுவதற்கும் காரணமான தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் மீது வழக்குப்பதிவு செய்து பணிநீக்கம் செய்ய வேண்டும். அதேபோல் கட்சி சார்பற்றவராக செயல்பட வேண்டிய சட்டப்பேரவை தலைவர் செல்வம் பாஜகவினரிடம் இருந்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விருப்ப மனுவை பெற்றுள்ளார். அது மட்டுமின்றி அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை அழைத்துச் சென்று துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து மனு அளித்துள்ளார். பதவியேற்பின்போது அரசியலமைப்பு சட்டத்தை மதித்து செயல்படுவேன் என்று உறுதியளித்துவிட்டு அதனை மீறும் சட்டப்பேரவைத் தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் பழங்குடியின மக்களுக்கான 0.5 சதவீத இடஒதுக்கீட்டை உள்ளாட்சித் தேர்தலில் புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x