Published : 18 Oct 2021 03:12 AM
Last Updated : 18 Oct 2021 03:12 AM

வெளிநாட்டில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்கள் கும்பகோணத்தில் அடக்கம் :

கும்பகோணம் கவிபாரதி நகரைச் சேர்ந்தவர் பாலகுரு மகன் பாலாஜி(38). இவர், கத்தார் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் தலைமைப் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடன், மனைவி சுந்தரி, மகள் ரிஷிவந்திகா, மகன் ரக்சன்(10) ஆகியோரும் கத்தார் நாட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி வார விடுமுறையையொட்டி, அந்த நாட்டில் உள்ள கடற்கரைக்கு தனது குடும்பத்தினருடன் பாலாஜி சென்றார். அப்போது, அங்கு கடல் நீரில் சிக்கித் தவித்த ஒரு பெண்ணைக் காப்பாற்ற முயன்ற பாலாஜி அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, அவருடன் நின்றிருந்த அவரது மகன் ரக்சனும் கடல் அலையில் சிக்கினார். சிறிதுநேரத்தில் இருவரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, பாலாஜி, ரக்சன் ஆகியோரின் உடல்கள் நேற்று காலை கும்பகோணம் கவிபாரதி நகருக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர், இருவரது உடல்களும் அருகேயுள்ள மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x