Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

ஒகேனக்கல்லை மேம்படுத்த தனி பெருந்திட்டம் தயாராகி வருகிறது : ஆய்வுக்கு பின்னர் சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த தனி பெருந்திட்டம் தயாராகி வருவதாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மேம்படுத்துதல் தொடர்பாக நேற்று மாலை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:

தமிழகத்தில் பெருமையும், சிறப்பும் மிக்க சுற்றுலாத் தலம் ஒகேனக்கல். ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த தனி ஒரு பெருந்திட்டம் தயாராகி வருகிறது. ஆண்டுக்கு பல கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் இது. கரோனா காலத்தில் அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வர முடியாத நிலை உள்ளது.

தற்போதைய பெருந்திட்டம் மூலம் பரிசல்கள் நிறுத்தும் இடம், நடைமேடை, எண்ணெய் மசாஜ் செய்யும் இடம், சமையல் கூடம், உடை மாற்றும் அறை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஆய்வு நடத்தியுள்ளோம். ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை இயற்கை அழகு குறையாத வகையில் மேலும் புதுப்பித்து மேம்படுத்த, வரும் காலங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கரோனா காரணமாக அருவியில் குளிக்க இதுவரை தடை தொடர்கிறது. முதல்வரிடம் கலந்தாலோசித்து, அனுமதி வழங்குவது தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்படும். ஒகேனக்கல்லில் சுற்றுலா தொடர்பாக கூடுதல் வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒகேனக்கல்லை முதல்கட்டமாக ரூ.10 முதல் ரூ.15 கோடி நிதியில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, தருமபுரி எம்பி செந்தில்குமார், எம்எல்ஏ.க்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி), மாவட்ட கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலருமான மருத்துவர் வைத்திநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன், பென்னாகரம் வட்டாட்சியர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x