Published : 26 Sep 2021 03:26 AM
Last Updated : 26 Sep 2021 03:26 AM
கடம்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட தங்கம்மாள்புரம் காலனியைச் சேர்ந்தவர் அய்யனார்(39). பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கடம்பூர் போலீஸார் அறிக்கையின் பேரில், கோவில்பட்டி கோட்டாட்சியர் முன் 2021, ஜனவரி 11-ல் அய்யனார் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது நன்னடத்தை பிணை பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து ஒரு வருடத்துக்கு நன்னடத்தையுடன் இருப்பதாக ரூ.15 ஆயிரம் பிணை பத்திரம் அளித்ததையடுத்து, கோட்டாட்சியரால் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் கழுகுமலை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெருமாள் மகன் கணேசன் என்பவர் அவரது சொந்த ஊரான தங்கம்மாள்புரம் காலனி பகுதிக்கு கடந்த 7-ம் தேதி இரவு சென்றுள்ளார். அப்போது, தனக்கு அய்யனார் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கணேசன் அளித்த புகாரின் பேரில், கடம்பூர் காவல் நிலைய போலீஸார் அய்யனாரை தேடி வந்தனர். இந்நிலையில் அய்யனார் கடந்த 20-ம் தேதி கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண்.2-ல் சரணடைந்தார். அவரை பேராவூரணி சிறையில் போலீஸார் அடைத்தனர்.
பிணை பத்திரத்தை மீறி செயல்பட்டதையடுத்து, அய்யனாருக்கு அளிக்கப்பட்ட நன்னடத்தை பிணையை ரத்துசெய்து, ஜனவரி 11-ம் தேதி வரை அவரை சிறையில் அடைக்ககோட்டாட்சியரும், நிர்வாகத்துறை நடுவருமான சங்கரநாராயணன் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT