Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM

உத்திரகாவேரி ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு :

வேலூர்: ஒடுக்கத்தூர் அருகே உத்திரகாவேரி ஆற்றில் மூழ்கி 8 வயது சிறுமி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட குருவராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி கோவிந்தராஜ். இவரது மனைவி வேண்டா, தனியார் ஷூ தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள். கோவிந்தராஜ் மற்றும் வேண்டா ஆகியோர் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டனர்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கோவிந்தராஜியின் கடைசி மகள் பூஜா (8), வீட்டின் அருகில் உள்ள உத்திரகாவேரி ஆற்றில் அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது, சிறுவர்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது பூஜா மட்டும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் அங்கிருந்து சென்றதுடன் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், தொழிற்சாலையில் மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய வேண்டா, இளைய மகள் பூஜாவை காணாமல் திடுக்கிட்டார். அருகில் உள்ள வீடுகளில் மகளை தேடியும் கிடைக்கவில்லை. ஆற்றின் கரை பகுதியில் பார்த்தபோது மகளின் உடைகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வேப்பங்குப்பம் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் தேடுதல் பணியை நிறுத்தினர். நேற்று காலை மீண்டும் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 கி.மீ., தொலைவில் அடர்ந்த செடிகளுக்கு மத்தியில் பூஜாவின் உடல் கரை ஒதுங்கி இருந்ததைப் பார்த்து மீட்டனர். பின்னர், சிறுமியின் உடலை பிரேதப்பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x