Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM
‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவரை ஜோலார்பேட்டையில் ரயில்வே காவல் துறையினர் நேற்று மீட்டனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக் கன்பாளையம் விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் மதன். இவரது மகன் விக்னேஷ்(17). பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த இவர் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்.
தேர்வு முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் மாணவர் விக்னேஷ் சோகமாக காணப்பட்டார். பெற்றோர் விசாரித்தபோது ‘நீட்’ தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், அத னால் தேர்வை சரிவர எழுதவில்லை எனக்கூறி வருத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என எண்ணிய விக்னேஷ் கடந்த 21-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி யடைந்த பெற்றோர், பெரிய நாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், காவல் துறையினர் மாயமான மாணவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தில் மாணவர் விக்னேஷ் சுற்றித்திரிந்ததும், கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை வரை செல்லும் விரைவு ரயிலில் மாணவர் விக்னேஷ் ஏறி பயணம் செய்தது அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது.
இதை உறுதி செய்த பெரிய நாயக்கன்பாளையம் காவல் துறையினர் உடனடியாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, ரயில்வே காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான காவல் துறையினர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடை மேடைகளில் கண்காணிப்பை பலப்படுத்தினர்.
அப்போது, அங்கு வந்த சென்னை செல்லும் ஆலப்புழா விரைவு ரயிலில் காவல் துறையினர் சோதனை நடத்தியபோது, மாணவர் விக்னேஷ் அந்த ரயிலில் தனியாக பயணம் மேற்கொள்வது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டார். பிறகு, மாணவரின் பெற்றோர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர், விக்னேஷ் பெற்றோருடன் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்கு நேற்று வந்தனர். அப்போது ரயில்வே காவல் துறையினர் அறிவுரைகளை வழங்கி மாணவர் விக்னேஷை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT