Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM
ஈரோடு: நம்பியூர் மற்றும் கடத்தூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கடந்த 1-ம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கோபி, கவுந்தப்பாடி, புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட சில பள்ளி மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கான பாதிப்பு முதல் நிலையிலேயே கண்டறியப்பட்டதால், யாருக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்நிலையில், கோபி அருகே உள்ள நம்பியூர் மணியகாரன் பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பள்ளியில் படிக்கும் 253 மாணவர்கள் மற்றும் 26 ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே போன்று கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவருக்கு தொற்று உறுதியானதால், அப்பள்ளியில் படிக்கும் 210 மாணவர்கள் மற்றும் 30 ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT