Published : 19 Sep 2021 03:17 AM
Last Updated : 19 Sep 2021 03:17 AM
அரக்கோணத்தில் தனியார் சிமென்ட் ஷீட் ஆலையில் வெந்நீர் பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் விண்டர்பேட்டை பகுதியில் பிரபல தனியார் சிமென்ட் ஷீட் தொழிற்சாலை உள்ளது. இங்கு, வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது, வெந்நீர் பாய்லர் ஒன்று திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதில், பணியாற்றிக் கொண்டிருந்த உ.பி மாநில தொழிலாளர்கள் முகமது ஜாவித் (21), சர்தார் அலி (25), பங்கஜ்குமார் (25), ராகுல் (19), மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராம் (19), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வசந்த் (24) ஆகிய 6 ஒப்பந்த தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். இவர்களை, சக தொழிலாளர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில், அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும், படுகாயமடைந்த தொழிலாளர்கள் அனைவரும் சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டனர்.
பாய்லர் வெடித்து 6 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தது குறித்து நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதுடன் தொழிலாளர் நல பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT