Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

கலந்தாய்வில் முறைகேடு என குற்றச்சாட்டு - தருமபுரி அரசுக் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டம் : பேச்சுவார்த்தைக்கு பின்னர் தீர்வு

தருமபுரி

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி கலந்தாய்வுக்கு வந்த மாணவர்கள் பெற்றோருடன் நேற்று முன்தினம் இரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான (2021-22) இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை பொது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலந்தாய்வில் முக்கிய பிரமுகர்களின் பரிந்துரையின் பேரில் சேர்க்கை வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என கூறி நேற்று முன்தினம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்தனர்.

மேலும், ‘மாணவர் சேர்க்கையை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும்’ என வலியுறுத்தி, கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற அதியமான்கோட்டை போலீஸார் மற்றும் கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் ஜோதிவெங்கடேஸ்வரன், கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, ‘அரசு விதிகளின்படி மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உள்ள இடங்கள் நிரம்பி விட்டன. சேர்க்கை கிடைக்காதவர்கள் மாவட்டத்தில் உள்ள பிற அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து பயன்பெறலாம்.மேலும், சேர்க்கை இடங்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தால் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்’ என தெரிவித்தனர்.

இதையடுத்து, இரவு 10 மணிக்கு மேல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x