Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM
இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்கவலியுறுத்தி அப்பநேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட 12 ஊராட்சிகள் தென்காசி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்படாததை கண்டித்தும், உடனே இணைக்க வலியுறுத்தியும், அல்லது இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வலியுறுத்தியும் நேற்று காலை இளையரசனேந்தல் பிர்காபோராட்டக்குழு சார்பில் கோவில்பட்டி அருகேயுள்ள அப்பநேரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
இளையரசனேந்தல் பிர்கா போராட்டக் குழு துணை ஒருங்கிணைப்பாளர் கற்பூரராஜ் தலைமை வகித்தார். தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ரெங்கநாயகலு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், இளையரசனேந்தல் பிர்கா உரிமைமீட்புக் குழுத் தலைவர் முருகன், மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT