Published : 31 Jul 2021 03:14 AM
Last Updated : 31 Jul 2021 03:14 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்லேட்டி, அண்ணாநகர், உச்சக்கொல்லை கொட்டாய், எர்ரகெட். கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இக்கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன், குப்பம் - பர்கூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, பர்கூர் பகுதியில் போதிய மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. கிணறுகள் வறண்டுள்ளதால் மக்களுக்கு குடிநீருக்கும், கால்நடைகளுக்கு தண்ணீரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காரக்குப்பம் ஊராட்சியில் தான் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் 35 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் பர்கூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு செல்கிறது.
ஆனால் கடந்த சில வாரங்களாக சீராக தண்ணீர் வரவில்லை. இதனால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பர்கூர் பிடிஓ., முருகன், காவல் ஆய்வாளர் முரளி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் சேகர், சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஓரிரு தினங்களில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT