Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

கோவில்பட்டியில் பாலம் பணியால் சாலை மூடல் - தகவல் பலகை இல்லாததால் போக்குவரத்து நெருக்கடி :

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயில் அருகே புதிதாக பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவில்பட்டி

பருவக்குடி - கோவில்பட்டி - எட்டயபுரம் - வேம்பார் சாலை விரிவாக்கப்பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதில், கோவில்பட்டி நகர்ப்பகுதியில் எட்டயபுரம் சாலை, மாதாங்கோவில் தெரு, பிரதான சாலை வரை சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நடைபெறவில்லை.

இப்பணியில் முதல்கட்டமாக கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயில் அருகே உள்ள 6 மீட்டர் அகலம் உள்ள ஓடைப்பாலம் ரூ.35 லட்சத்தில் 15 மீட்டராக விரிவாக்கம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. பாலத்துக்கு கீழ் 3மீட்டர் உயரத்துக்கு, 6 மீ நீளத்துக்கு நீர்வழிப்பாதை அமைக்கப்படுகிறது. மேலும், ரூ.32.50 லட்சத்தில் பாலத்தின் கிழக்குப்பகுதியில் 100 மீட்டர் தூரமும், மேற்கு பகுதியில் 80 மீட்டர் தூரமும் அணுகுசாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் சுமார் 40 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலம் பணிகள் நடைபெறுவது குறித்து, முறையான அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. இதனால், பெரும்பாலான கனரக வாகனங்கள், எட்டயபுரம் சாலையில் வந்துவிடுகின்றன. பாலம் வரை சென்று, மேற்கொண்டு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. மீண்டும் அவை பின்நோக்கி வந்து,திரும்பிச் செல்வதற்குள் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுவிடுகிறது. எனவே, சாலை அடைக்கப்பட்டது குறித்த தகவல் பலகையை, புதுரோடு சாலை விலக்கு மற்றும் பூங்கா கிழக்கு சாலை தொடக்கத்தில் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x