Published : 24 Jul 2021 03:14 AM
Last Updated : 24 Jul 2021 03:14 AM
தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக வந்த பெண் உயிரிழந்த வழக்கின் விசாரணை அறிக்கையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் வட்டாட்சியரிடம் வழங்கியதை உயர் நீதிமன்றம் கண்டித்தது.
குமரி மாவட்டம், பேயன்குளத்தைச் சேர்ந்த செல்லசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தமனு: எனது மருமகள் நிவேதிதாவை பிரசவத்துக்காக மார்த்தாண்டம் பிபிகே மருத்துவமனையில் சேர்த்தோம். அங்குதவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், கடந்தாண்டு பிப்ரவரி 6-ம் தேதி உயிரிழந்தார். புதுக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும், இவ் வழக்கைபோலீஸார் முறையாக விசாரிக்கவில்லை. பின்னர், வழக்கில் மேல் நடவடிக்கை தேவையில்லை என வட்டாட்சியரிடம் அறிக்கை அளித்தனர்.
மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான் என் மருமகள் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பு விசாரணையை, புதுக்கடை காவல் ஆய்வாளர் முடித்து விட்டார். என் மகனிடம் விசாரணை நடத்தாமலேயே வழக்கை போலீஸார் முடித்துள்ளனர்.
எனவே என் மருமகள் உயிரிழந்த வழக்கின் விசாரணை அறிக்கையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் விசாரித்து, வழக்கின் விசாரணை அறிக்கையை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல், வட்டாட்சியரிடம்தாக்கல் செய்தது தவறு. எனவே விசாரணைதொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 17-க்கு ஒத்தி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT