Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவர் உட்பட 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி பகுதிகளில் பலர் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்து பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாரண்ட அள்ளி 4 ரோடு பகுதியில் நேற்று போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கடூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (33) எனத் தெரிய வந்தது. அவரும், அவர் தந்தை எல்லப்பன் (69) என்பவரும் வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. எனவே, அவர்கள் இருவரையும் மாரண்ட அள்ளி போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கி வாங்கிய மாரண்டஅள்ளியைச் சேர்ந்த ரஜினி (41), சீரியம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (40), கிருஷ்ணன் (52), கரகூரைச் சேர்ந்த முல்லேசன் (26), மல்லப்பன் (50), அன்பு (32), சொக்கன் (45) உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 11 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர் அனைவரும் அரூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
11 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்
தளி அருகே நாட்டுத்துப் பாக்கிகள் தயார் செய்யப்படு வதாக கிராமநிர்வாக அலுவலர் மாரிமத்துவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கிகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த உனிசேநத்தம் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ், காவேரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராஜ், தளியைச் சேர்ந்த இம்ரான் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT