Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை : அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும்போது, “ வருவாய் துறைமூலம் பெறப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது விரைந்துநடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக விதவையர் உதவித்தொகை,முதியோர் உதவித்தொகை வேண்டிவிண்ணப்பிப்பவர்களுக்கு உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும். பணிகள் தரமானதாகவும், உறுதி தன்மையோடும் இருக்க வேண்டும். வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விரயம் செய்யாமல், திட்டமிட்டு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். தவறுகள் ஏற்பட்டால் தொடர்புடைய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாகர்கோவில் மாநகராட்சி மூலம் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணி, குடிநீர் திட்டப் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும். முடிவுறாமல் உள்ள சாலைப் பணிகளை முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்காக முழு முயற்சியோடு பாடுபட வேண்டும். பணிகளில் எவ்வித சுணக்கமும், தொய்வும் இன்றி செயல்பட வேண்டும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x