Published : 25 Jun 2021 03:15 AM
Last Updated : 25 Jun 2021 03:15 AM
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் நடவ டிக்கை எடுக்கப்படும் என கூடுதல் ஆட்சியர் பிரதாப் அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.
தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப் ஆய்வு செய்தார்.இதற்காக, சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த கூடுதல் ஆட்சியரை ஒன்றியக் குழு தலைவர் ராணி அர்ஜுனன் வரவேற்றார். பின்னர், ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் ஊராட்சிகள் தோறும் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனுக்கள்’ மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர், ஊராட்சிகளில் குடிநீர் திட்டங்கள், மின்சார வசதி குறித்து அவர் ஆய்வு செய்ததுடன் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறித்த காலத்தில் பணிகளை முடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இந்தக் கூட்டத்தில், மண்டல அலுவலர் அறிவொளி, ஆணையாளர்கள் பாஸ்கர், மோகன சுந்தரம், பொறியாளர்கள் மாதவி, மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, நரசிங்கபுரம் ஊராட்சி யில் நடைபெற்று வரும் பசுமை வீடு கட்டும் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, நரசிங்கபுரம் ஊராட்சியில் கூட்டுறவு ரேஷன் கடையில் வழங்கப் பட்டு வரும் அரசின் இரண்டாம் தவணை கரோனா நிவாரண உதவித் தொகையுடன் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை பார்வையிட்டார்.
அப்போது, பொதுமக்கள் சிலர் தாங்கள் கடந்த 14 நாட்களாக நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணி செய்யாமல் உள்ளோம் என முறையிட்டனர். அவர்களிடம், கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா? என கூடுதல் ஆட்சியர் பிரதாப் கேட்டறிந்தார். மேலும், ‘கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரும் அச்சப்பட வேண்டாம்’ என்றும் கூறினார். தொடர்ந்து, ஓதலவாடி, மண்டகொளத்தூர், திருமலை ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப்பணிகள், சிறு பாலம், பசுமை வீடு கட்டும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT