Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

ஊரடங்கால் - டீ விற்று குழந்தைகளை படிக்க வைக்கும் பெண் :

மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்தவர் கலைவாணி. இவரது கணவர் மணிகண்டன் கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின் போது உடல் நலமில்லாமல் உயிரிழந்தார். இதனால் வாழ்வாதாரம் இழந்த கலைவாணி, தனது 10 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் இரு பெண் குழந்தைகளுடன் சிரமப்பட்டார். அதன்பிறகு தனியார் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து அதில் கிடைக்கும் வருவாயில் குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

கரோனா இரண்டாவது அலை ஊரடங்கால் கலைவாணி உணவகத்தில் பார்த்து வந்த வேலையை இழந்துள்ளார். தற்போது வரை வேறு வேலை கிடைக்காததால் தன் கணவரின் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி டீ விற்பனையில் ஈடுபட்டு குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.

இதுகுறித்து கலைவாணி கூறுகையில், குழந்தைகளை கஷ்டப்பட்டாவது படிக்க வைக்க வேண்டும். அன்றாட வாழ்வாதாரத்துக்கும் சிரமப்படுகிறோம். இந்த ஊரடங்கில் நிரந்தரமாக ஒரு வேலையும் கிடைக்கவில்லை. அதனால் டீ விற்கும் இந்த வேலையை செய்து வருகிறேன். கரோனா பயத்தால் பலரும் டீ வாங்கி குடிக்க அச்சப்படுகின்றனர். அதனால் ரொம்ப தூரம் சுற்றித்தான் கொண்டு வந்த டீயை விற்க வேண்டியுள்ளது.

சத்துணவு பணியாளர் பணி கோரி விண்ணப்பித்துள்ளேன். அந்த பணியை வழங்கினால் என் குடும்பத்தின் வறுமை நீங்கி, தொடர்ந்து என் குழந்தைகளை படிக்க வைக்க முடியும். மாவட்ட ஆட்சியர் கருணை காட்ட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x