Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் தெற்கு தெருவில் உள்ள காளியம்மன் கோயிலில் கடந்த 3-ம் தேதி மாலை திருவிழா நடைபெற்றுள்ளது. இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் மற்றும் வருவாய்த்துறையினர் விழா நடக்க இருந்த இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் ஊரடங்கு விதிமுறை பற்றி எடுத்துக் கூறி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்நிலையில் ஊரடங்கை மீறி கோயில் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளை தனிமனித இடைவெளி உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து விஏஓ நாகலாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதே ஊர் தெற்குத் தெருவைச் சேர்ந்த சமுதாயத் தலைவர் மந்தைராஜ், செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் பாலமுருகன் மற்றும் சதீஷ்குமார், சக்திவேல், ரவிச்சந்திரன், கருப்பசாமி, காளிமுத்து சவுந்தரபாண்டி, சுந்தர்ராஜ், தங்கமாரியப்பன், தங்கமுத்து, அர்ஜூன் ஆகிய 13 பேர் மற்றும் சிலர் மீது நாகலாபுரம் போலீஸ் எஸ்ஐ ஹென்சன்பவுல்ராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT