Published : 28 May 2021 06:41 AM
Last Updated : 28 May 2021 06:41 AM

கரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள - கோவையில் கூடுதல் கவனம் செலுத்தி தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

கரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள கோவை மாவட்டத்துக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றின் 2-வதுஅலை தமிழகத்தை மோசமாக பாதித்துள்ளது. அரசு மேற்கொண்டநடவடிக்கைகளால் படிப்படியாக நோய் தொற்று சற்று குறைந்து வருவது ஆறுதலை அளிக்கிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் (மே 26) கோவையில் 4 ஆயிரத்து 268 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 ஆயிரத்து 707 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாநகரில் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை என இரண்டு அரசு மருத்துவமனைகள் உள்ளன. சில தனியார்மருத்துவமனைகளிலும் கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சுற்று வட்டார மாவட்டங்களிலிருந்தும் கரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சைக்காக கோவை மாநகர மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்.

இந்நிலையில் கோவை மாநகரில்ஆக்சிஜன் படுக்கைகளுக்கும், ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் மரணங்களைத் தவிர்த்திட கோவை மாவட்டத்துக்கு ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்திட வேண்டும். மேலும், ஆக்சிஜனும் கோவை மாவட்டத்துக்கு அதிகமாக வழங்க வேண்டும். கரோனா தொற்று அதிகமாக ஏற்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு விரைந்து ஏற்பாடு செய்தால் ஓரளவுக்கு தொற்று பரவாமல் தடுப்பதற்கும் பயன்படும். கரோனா தொற்றில் முதல் இடத்தில் உள்ள கோவை மாவட்டத்துக்கு கூடுதல் கவனம் செலுத்தி தொற்று பரவாமல் தடுப்பதற்கும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x